அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்
Published on

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் கிழக்கு அரபிக்கடலில் கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரையையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதியில் மீனவர்கள் 30-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அடுத்த 48 மணிநேரத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று(திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பெரியாறு 7 செ.மீ., வத்திராயிருப்பு, பவானி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேச்சிப்பாறை, அரியலூர் தலா 2 செ.மீ., ராதாபுரம், ராஜபாளையம், புதுக்கோட்டை, செங்கோட்டை, நத்தம், பேரையூர், சூளகிரி, போடிநாயக்கனூர், பூதப்பாண்டி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com