ஜெகதாபி அரசு பள்ளியில் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி

ஜெகதாபி அரசு பள்ளியில் சூரியஒளி ஆற்றலை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி
சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி
Published on

வெள்ளியணை:

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், ஜெகதாபியில் சுமார் 650 மாணவர்களை கொண்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பல்வேறு செயல்பாடுகள் அரசின் கவனத்தை ஈர்த்ததால், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறந்த பள்ளியாக தேர்வாகி, இந்த பள்ளியை கடந்த ஆண்டு தமிழக அரசு மாதிரி அரசு பள்ளியாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த அரசு அளித்த சிறப்பு நிதியை கொண்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளை கொண்ட கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், கண்காணிப்பு கேமராக்கள், எல்.கே.ஜி, யூ.கே.ஜி. மாணவர்களுக்கான கண்கவர் வண்ண ஓவியங்களை கொண்ட வகுப்பறைகள், சறுக்கு விளையாட்டுடன் கூடிய விளையாட்டுப் பூங்கா உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

தற்போது பள்ளியின் அலுவலகம், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரியஒளி ஆற்றலை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட நிதியின் மூலம் ரூ.4 லட்சத்தில் பணிகள் தொடங்கி நிறைவுபெற்றன. இதன் மூலம் தற்போது 3 கிலோ வாட் மின்சாரம் சூரியஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, பள்ளியின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் மின்கட்டணம் செலுத்துவது குறைந்துள்ளது. தடையற்ற மின்சாரமும் கிடைக்கிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பள்ளி திறக்கப்படும்போது இந்த மின்உற்பத்தி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com