

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் அவ்வப்போது விநோத சம்பவங்கள் நடைபெறும். அதன்படி நேற்று இரவு கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி மண்டபத்தின் தூண்களுக்கு இடையே சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு பக்தர்கள் கூட்டம் திரண்டது.
கோவில் மண்டபத்தில் நந்தி பகவானுக்கு அருகே உலாவியபடி இருந்த சாரைப்பாம்பைக் கண்ட பக்தர்கள் 'அரோகரா' முழக்கத்துடன் பக்திப் பரவசத்தில் மூழ்கினர்.
கற்பூரம் ஏற்றி சாரைப் பாம்பை வணங்கினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக 5-வது பிரகார மண்டபத்தில் சாரைப் பாம்பு சுற்றித்திரியும் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதைத்தொடர்ந்து பிரகார மண்டபத்தின் தூண்களுக்கு அருகே இருந்த மின் மீட்டர் பெட்டியில் பாம்பு நுழைந்தது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள நந்தவனம் மற்றும் அன்னதானம் தயாரிப்பு கூடங்களுக்கு அருகே பாம்புகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இவை இரவு பகல் பாராமல் கோவில் பிரகாரங்களில் அவ்வப்போது சுற்றித்திரிந்து வருகிறது.
இவ்வாறு சுற்றித்திரியும் பாம்புகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இதுவரை அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. ஆனாலும், பாம்புகளின் திடீர் நடமாட்டம் பக்தர்களிடையே சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.