ஸ்ரீமுஷ்ணம் அருகே போலீஸ்காரர் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் கற்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர் சேத்தியா தோப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.
நேற்று மதியம் 3 மணி அளவில் 5½ அடி நீளம் கொண்ட நல்லபாம்பு ஒன்று மணிகண்டன் வீட்டுக்குள் புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் செல்போன் மூலம் மணிகண்டனை தொடர்பு கொண்டு வீட்டிற்குள் பாம்பு புகுந்த தகவலை தெரிவித்தனர். உடனே மணிகண்டன் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஏட்டு கொளஞ்சி நாதன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றனர். மணிகண்டனின் வீட்டில் உள்ள ஸ்டோர்ரூமில் உள்ள பொருட்களுக்கு இடையே பதுங்கியிருந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மடக்கி பிடித்து அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். பாம்பை பிடித்த பிறகே வீட்டில் இருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.

