வாலாஜா அருகே ஆந்திராவுக்கு வேனில் கடத்திய 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு வேனில் கடத்தப்பட்ட 10 டன் ரேசன் அரிசி வாலாஜா அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
வாலாஜா அருகே ஆந்திராவுக்கு வேனில் கடத்திய 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Published on

வாலாஜா:

வாலாஜா தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் சவுந்தரராஜன் ஆகியோர் சென்னை-பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள வாணிசத்திரத்தில் இன்று காலை மணல் கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, வேலூர் மார்க்கமாக வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். வேனில் 50 கிலோ எடையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 10 டன் எடையுள்ள 200 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது, டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

ரேசன் அரிசி கடத்தி வந்த வேன், ஆந்திர பதிவெண் கொண்டது. எனவே, 10 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, 10 டன் ரேசன் அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

10 டன் ரேசன் அரிசி மூட்டைகளிலும் அரசின் முத்திரை சீல் உள்ளது. எனவே, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை கிடங்கில் இருந்து அப்படியே கடத்தி வந்துள்ளனர். இதற்கு உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வளவு டன் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முடியாது. தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி, ஆந்திராவுக்கு ரெயில்கள், பஸ்கள் மூலம் கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது என்று அதிகாரிகளே குற்றம் சாட்டினர்.

சமீபத்தில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில், சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 26) என்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தாலும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

குறிப்பாக, ஆந்திராவுக்கு கடத்தபடும் ரேசன் அரிசி, அங்கு பாலிஷ் போட்டு புதுரக அரிசியாக தமிழக சந்தைக்கே கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தலில் அதிகாரிகள் முதல் ஆந்திர கும்பல் வரை சங்கிலி தொடர் போல் இணைந்து செயல்படுகின் றனர்.

எனவே, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com