4,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு

கொரோனா காரணமாக போதிய வருமான இல்லாததால் தனது ஊழியர்களில் 4 ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்ய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
Published on

சிங்கப்பூர்:

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. இதனால் விமான ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், நிலைமையை சீரடையாததால் பல நிறுவனங்களும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளன. இந்நிலையில், அந்த நடவடிக்கையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இறங்கியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 17 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், ஊழியர்களுக்கு சம்பளம், கடனாளர்களுக்கு செலுத்தவேண்டிய தொகை, பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 4 ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com