புயல் நிவாரணம் வழங்கக்கோரி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க கோரி கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். #GajaCyclone
புயல் நிவாரணம் வழங்கக்கோரி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அருகில் உள்ள மாவடுகுறிச்சி (கி) ஊராட்சி நாடாகாடு கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை அரசு வழங்கிய 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் மற்றும் நிவாரண உதவித்தொகை, புயல் பாதித்து 60 நாட்களைக் கடந்த நிலையிலும் கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த நாடாகாடு கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நிவாரணம் வழங்காவிட்டால் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைப்பதாக கூறினர்.

தலைமை இடத்து துணை தாசில்தார் யுவராஜ், கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பரமானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், இளம்பரிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #GajaCyclone

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com