

மங்களூரு:
உடுப்பி மாவட்டம் பைந்தூரில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் மதவாதத்தில் ஈடுபடுவது இல்லை. மதவாதங்களில் ஈடுபடுவதை பாரதிய ஜனதா கட்சியினர் நிறுத்த வேண்டும். அவர்கள் நிறுத்தி விட்டால் வேரு யாரும் மதவாதத்தில் ஈடுபடமாட்டார்கள். பஜ்ரங்தள், ஸ்ரீராமசேனா உள்ளிட்ட எந்த இந்து அமைப்பையும் தடைசெய்ய உள்ளதாக கர்நாடக அரசு கூறவில்லை.
இந்த அமைப்புகளின் செயல்டுபாகளை கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
என்னை இந்துக்களின் எதிரி என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகிறார். என்னை அப்படி அழைப்பவர்கள் தான் மனிதநேயத்துக்கு எதிரானவர்கள். உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி எத்தகையது என்பது எல்லோருக்கும் தெரியும். கோட்சேவின் சீடர்களிடம் இருந்து பாடம் கற்கவேண்டிய அவசியம் இல்லை.
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மதவாத சக்திகளே காரணம். சங்பரிவார் அமைப்புகளின் பின்புலத்திலேயே பதட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.