

பெங்களூரு:
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதா இறக்கி உள்ளது. யோகி ஆதித்யநாத் கர்நாடகாவில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக மக்கள் உயிரிழந்த நிலையிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. முதலில் உ.பி.க்கு சென்று மக்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள் என காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
இந்நிலையில் பாகல்கோட் பகுதியில் பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத், கர்நாடகாவில் சித்தராமையா அரசு ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதியளிக்கிறது என குற்றம் சாட்டிஉள்ளார்.
“சித்தராமையா அரசு கர்நாடகாவில் ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதியளிக்கிறது. உத்தரபிரதேசமாக இருந்தாலும், கர்நாடகாவாக இருந்தாலும் சரி பயங்கரவாதத்திற்கு நம்முடைய தேசத்தில் இடம் கிடையாது. இந்த குழுக்களுக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை ஆட்சியில் இருந்து மக்கள் நீக்க வேண்டும்,” என்று கூறிஉள்ளார் யோகி ஆதித்யநாத். #KarnatakaElections2018 #YogiAdityanath