திருப்பூரில் 25 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது

திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் 25 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது
Published on

நல்லூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோடு கோவில்வழி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் நேற்று காலை அந்தபகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று புகையிலை பொருள் கேட்டுள்ளார். ஆனால் அங்கு இல்லை என்று திரும்பினார். அப்போது அவரை பார்த்த ஒரு வியாபாரி தன்னிடம் புகையிலை பொருள் உள்ளது. கடையைவிட குறைந்த விலைக்கு தருகிறேன் என்று கூறி அவருக்கு புகையிலை பொருள் வழங்கினார். இதை சாப்பிட்ட சதீசுக்கு சிறிது நேரத்தில் வாய் எரிச்சல் ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்தார். இதனால் அவரை அருகில் இருந்த ஒருவர் பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டார்.

பின்னர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசில் சதீஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சதீசை அழைத்துக்கொண்டு கோவில் வழி பகுதியில் அந்த வியாபாரியை தேடினர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தேனி அல்லிநகரை சேர்ந்த தங்கராஜ் (39) என்பதும், அவர் திருப்பூர் வீரபாண்டி வள்ளலார் நகரில் தங்கியிருந்து கடந்த 2 ஆண்டுகளாக கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்கள் போலியானதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com