

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன்காரணமாக கிராமத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கங்கை ஆற்றில் பிணங்களாக மிதந்தன. உத்தர பிரதேச அரசு மீது பீகார் குற்றம்சாட்டியது.
கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும். உடல்களை யாரும் தூக்கி வீசாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு இரு மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டது.
அதன்பின் கங்கையைில் பிணங்கள் மிதப்பது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை ஆற்றில் தூக்கி வீசும் வீடியோ என்ற வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராப்தி ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் இருந்து இருவர் (ஒருவர் பிபிஇ கிட் அணிந்திருந்தார்) ஒரு உடலை தூக்கி வீசும் வீடியோ வெளியானது.
இதுகுறித்து பல்ராம்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவிக்கையில், உறவினர்கள் உடலை தூக்கி வீச முயற்சி செய்துள்ளனர். அவர்களை கைது செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘முதற்கட்ட விசாரணையில் கடந்த 25-ந்தேதி நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 28-ந்தேதி உயிரிழந்துள்ளார். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.