

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.
இதனால் கூட்டணி ஆட்சி உடனடியாக அமைந்து பா.ஜ.க. முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா கட்சி தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மும்பையில் இன்று நடைபெற்ற சிவசேனா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் இளைஞரணி தலைவரான ஆதித்யா தாக்கரே, சட்டசபை தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை நியமனம் செய்தார்.
இந்நிலையில், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.