

சென்னை:
புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்று பதுக்கியது தொடர்பாக தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் குமார், கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் பண மோசடிக்கு உதவியது தெரிய வந்தது.
இது தொடர்பாக சேகர் ரெட்டி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சேகர் ரெட்டிக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தாவை சேர்ந்த பரஸ்மால் லோதா, சென்னையை சேர்ந்த அசோக் ஜெயின், மகாவீர் கிரானி ஆகியோரும் கைது செய்யப் பட்டனர்.
சி.பி.ஐ. தொடர்ந்த வழ்க்கில் கைதான சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம்,ராமச் சந்திரன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் மீதும் அமலாக்கத் துறை தனியே வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.