டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து ஷாகிப் அல் ஹசன் எங்களுடன் ஏதும் பேசவில்லை: பிசிபி

ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து தங்களிடம் ஏதும் பேசவில்லை என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஷாகிப் அல் ஹசன்
ஷாகிப் அல் ஹசன்
Published on

வங்காளதேச அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் சமீபத்தில் ‘‘மனதளவில் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு நான் தயாராகவில்லை. ஆனால், அணி சிறந்த வடிவமைப்பை பெற வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். கேப்டனாக இருந்து சிறப்பாக விளையாடினால், அது சிறந்ததாக இருக்கும்’’ என கூறியிருந்தார்.

ஆனால், ஷாகிப் அல் ஹசன் எங்களிடம் அது குறித்து பேசவில்லை என்று வங்காளதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

நஸ்முல் ஹசன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நேற்றுகூட எனது வீட்டில் ஷாகிப் அல் ஹசன் உள்பட சில சீனியர் வீரர்களை சந்தித்து பேசினேன். அப்போது கூட கேப்டன் பதவி குறித்து ஷாகிப் அல் ஹசன் என்னிடம் ஏதும் கூறவில்லை. எனினும், டெஸ்ட் போட்டியில் விளையாட அவர் தயக்கம் காட்டுகிறார்.

கடந்த சில வருடங்களாகவே எங்கள் அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடுவதற்காக செல்லும்போது, ஷாகிப் அல் ஹசன் அடிக்கடி ஓய்வு கேட்பார். இதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு ஆர்வம் குறைவாகவே உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் டெஸ்ட் போட்டியில் அவரது விருப்பமின்மை பற்றி நாங்கள் ஏதும் கேட்டது கிடையாது’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com