ஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் மக்களுக்கு விபரீதம் நடக்கும் என்றும், அதனால் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும் என்றும் பா.ஜ.க. எம்.பி. பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
பாஜக எம்பி பர்வேஷ் வர்மா
பாஜக எம்பி பர்வேஷ் வர்மா
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் பெரும் வன்முறை நடந்த ஷாகீன் பாக் பகுதியிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஷாகீன்பாக் போராட்டத்தை மேற்கு டெல்லி பாஜக எம்பி பர்வேஷ் வர்மா கடுமையாக சாடி உள்ளார். 

இது தொடர்பாக பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் விஷயத்தில் என்ன நடந்ததோ, அதே போன்று டெல்லியிலும் நடக்கும். லட்சக்கணக்கானோர் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கூடுகிறார்கள், அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கொலை செய்யலாம். எனவே, மக்கள் இப்போது முடிவு செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணர்ந்தனர். ஆனால் இதுபோன்ற ஒரு சூழ்நிலை அதிகரித்தால், அவரால் மக்களை காப்பாற்ற முடியாமல் போகலாம். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, பிப்ரவரி 8 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால், பிப்ரவரி 11ம் தேதி இரவு ஷாகீன்பாக் போராட்டக்களம் காலியாகிவிடும்’ என பர்வேஷ் வர்மா குறிப்பிட்டார். 

டெல்லி ஷாகீன் பாக்கில் நடைபெறும் போராட்டத்தை கண்டித்து, மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தும் ஏற்கனவே கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com