சியோல் நகர மேயர் மாயம் - தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரிய தலைநகரான சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பார்க் ஒன் சூன்
பார்க் ஒன் சூன்
Published on

சியோல்:

தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலின் மேயராக செயல்பட்டு வந்தவர் பார்க் ஒன் சூன். ஆளும் மத்திய இடது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பார்க் தென்கொரியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்டவர். 

இந்நிலையில், தனது தந்தையை காணவில்லை எனவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் பார்க்கின் மகள் இன்று போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து, மாயமான பார்க்கை தேடும் பணியில் சியோல் நகர போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பார்க்கின் செல்போன் கடைசியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்துள்ளது.

அதன்பின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மலைப்பகுதியில் போலீசார் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறனர். 

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேயர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பார்க் மீது 'மி டூ’ பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்தார். 

இதனால், சியோல் மேயர் பார்க் ஒன் சூன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் மற்றும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தலைநகர் சியோலின் மேயர் மாயமாகியுள்ளதால் தென்கொரியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com