

சென்னை:
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரது முன்னிலையில் மூத்த வக்கீல் கே.என்.விஜயன் இன்று ஆஜராகி ஒரு கோரிக்கை வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கட்சிகாரர் ஜோசப் என்பவர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்று உத்தரவிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து அதன் அடிப்படையிலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும்.
ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் நீதி விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் உங்களது கோரிக்கையை இன்று மனுவாக தாக்கல் செய்யுங்கள். நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இது தொடர்பான மனு இன்று பிற்பகலில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.