செங்கோட்டை அருகே விபத்து- வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலி

செங்கோட்டை அருகே சாலையை கடந்த அய்யப்ப பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கோட்டை அருகே விபத்து- வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலி
Published on

செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேட்டு துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவபண்டாரம். இவரது மனைவி நல்லமுத்து(வயது65). இவரது உறவினர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த பேச்சிமுத்து(23). இவர்கள் தங்கள் உறவினர்களுடன் நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

பின்பு இன்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பினர். வேன் செங்கோட்டை அருகே கேசவபுரம் பகுதியில் வந்தபோது வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழே இறங்கினர். வேனை டிரைவர் ரோட்டு ஓரமாக நிறுத்தினார். வேனில் இருந்து இறங்கிய பக்தர்கள் சாலையை கடந்து சென்றனர்.

அப்போது அந்தவழியே காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளா நோக்கி சென்றது. எதிர்பாராதவிதமாக வேன் ரோட்டை கடந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் நல்லமுத்து, பேச்சிமுத்து உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி  போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். பேச்சிமுத்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பேச்சிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com