

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சென்னை சாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் தான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. ரூ.89 கோடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படையினர் வழியில் நின்று கொண்டு பொதுமக்களின் வாகனங்களை சோதனை செய்து பணம் பறிமுதல் செய்வதை தவிர்த்து, தொகுதிக்குள் துணை ராணுவத்தை நிறுத்தி கண்காணிக்க வேண்டும்.
மேலும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்கு கேட்பதை அனுமதிக்க கூடாது. அதன் மூலம் தான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இது போன்ற பல மாற்றங்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் இதையெல்லாம் செய்யுமா என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலைக்கோட்டு உதயம் மீண்டும் போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.