

அரியானா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் இரண்டு சிறுமிகளை கற்பழித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 38-க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். இந்த கலவர சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிர்சாவில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று காலை அரசு அதிகாரிகள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க 41 பாராமிலிடரி படைவீரர்கள், 4 ராணுவ கம்பெனிகள், 4 மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு ஆயுதப்படை பிரிவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையை முன்னிட்டு சிர்சாவில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.