

ஐதராபாத்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று முன்தினம் ரத்து செய்தது.
இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் 144 தடை உத்தரவு போடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை இரவில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த ஒரு கூட்டமோ அல்லது பேரணியோ ஏற்பாடு செய்யக்கூடாது என்று தடை விதித்கப்பட்டுள்ளது.
இதேபோல அசாம் மாநிலத்தில் உள்ள ஹாலாசண்டி மாவட்டத்திலும் திங்கட்கிழமை மாலையில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் பக்ரீத் பண்டிகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.