திருச்சி நகரில் இரண்டாவது கட்டமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி நகரில் இரண்டாவது கட்டமாக 19 வார்டுகளில் ரூ.73½ கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
திருச்சி நகரில் இரண்டாவது கட்டமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடக்கம்
Published on

திருச்சி:

திருச்சி நகரில் இரண்டாவது கட்டமாக 19 வார்டுகளில் ரூ.73½ கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் 10,722 வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்கப்படும்.

திருச்சி நகரில் ஏற்கனவே பழைய திருச்சி நகராட்சி பகுதி மற்றும் சில வார்டுகளில் புதை வடிகால் எனப்படும் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரண்டாவது கட்டமாக 25 வார்டுகளில் ரூ.344 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

இரண்டாவது கட்ட பணியில் தற்போது தொகுப்பு - 2 ல் ரூ.73 கோடியே 48 லட்சத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகளின் தொடக்க விழா நேற்று வார்டு எண்7-ஐ சேர்ந்த விஸ்வாஸ் நகரில் நடந்தது. ப.குமார் எம்.பி. முன்னிலையில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் இந்த பணிகளை தொடங்கி வைத்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

இரண்டாவது கட்ட பாதாள சாக்கடை பணி தொகுப்பு இரண்டின் கீழ் தற்போது 19 வார்டுகளில் வேலை நடைபெற உள்ளது. சஞ்சீவி நகர், உறையூர் ஏ.யூ.டி. காலனி, பாத்திமா நகர், வெக்காளியம்மன் நகர், யுவர்ஸ் காலனி, வடக்கு தாராநல்லூர், பிச்சை நகர், விஸ்வாஸ்நகர், மகாலெட்சுமி நகர், அகிலாண்டேஸ்வரி நகர், ஜீவா நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், மாரிஸ் அவென்யூ, பிரண்ட்ஸ் என்கிளேவ், ராஜா காலனி, அம்மையப்பா நகர், கீதா நகர், அண்ணாமலை நகர், ஜெயம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 7,436 வீடுகள், 3,286 வணிக நிறுவனங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 722 இணைப்புகள் வழங்கப்படும்.

இதற்காக 66 கி.மீ. நீளத்திற்கு புதைவடிகால் குழாய்கள் மற்றும் 12 கி.மீ. நீளத்திற்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் 12 எண்ணிக்கையில் உந்து நிலையங்கள் (பம்பிங் ஸ்டேஷன்) அமைக்கப்படும். 30 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட பழைய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com