தனுஷ்கோடியில் பலத்த சூறாவளியுடன் கடல் கொந்தளிப்பு

தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இன்று பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி
Published on

ராமேசுவரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் உள்மாவட்டங்களிலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.

தெற்கு அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். நேற்றும், இன்றும் பலத்த சூறாவளி வீசுகிறது.

இதனால் வழக்கத்தை விட தனுஷ்கோடியில் கடல் சீற்றம் இன்னும் அதிகமாக உள்ளது. பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் சாலைகள் மணலால் முழுவதும் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கடல் சீற்ற ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குகின்றனர்.

ராமேசுவரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் லட்சுமணன் தீர்த்தம் தெரு தெப்பக்குளம் அருகில் பனைமரம் முறிந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com