

வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம். வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகு பராமரிப்பு, வலைகள் சரிசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மீனவர்கள் பைபர் படகுகளில் சென்றும் மீன் பிடித்து வருகின்றனர். இதில் குறைந்த அளவில் மீன்கள் கிடைப்பதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கடல் சீற்றமாக உள்ளது. புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இன்றும் கடல் தொடர்ந்து சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றம் தணிந்த பிறகு தான் கடலில் பைபர் படகுகளில் சென்று மீன் பிடிக்க செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்டு சேதமான படகுகளை மீனவர்கள் இன்று வரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.