

இட்டாநகர்:
அருணாச்சல பிரதேசத்தின் சுபான்சிரி மாவட்டத்தில் புதிய இன தவளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 'ஒடோரன்னா அருணாச்சலன்சிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தவளை மழைக்காலங்களில் மட்டுமே காணப்படும். ஒடோரன்னா என்பது பொதுவான இனத்தின் பெயரை குறிக்கும். அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அருணாச்சலன்சிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பச்சை நிறத்தில், நடுத்தர அளவில் உள்ள இந்த தவளையை மாநிலத்தின் காட்டுப்பகுதியில் உள்ள நீர்நிலையில் இருந்து இந்திய விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் பாஸ்கர் மற்றும் பைக்ராம்ஜித் ஆகிய இருவரும் கண்டறிந்தனர்.
ஒடோரன்னா இனத்தைச் சேர்ந்த அனைத்து தவளைகளும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இந்த தவளையின் கண்ணிற்கு கீழே கருப்பு நிறத்தில் உள்ளது மற்ற தவளைகளிடமிருந்து தனித்து காட்டுகிறது.
தவளை இனங்கள் அழிந்து வரும் நிலையில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற பல புதிய இன தவளைகளை தொடர்ச்சியாக கண்டுபிடித்து வருகின்றனர்.