

டோக்கியோ:
உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. தற்போது உடல் உறுப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, பன்றிகளின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு அது மனிதர்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து, ரஷியா மற்றும் பல நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பன்றிகளின் உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.
பன்றிகளின் உடல் உறுப்புகள் மனிதர்களின் உறுப்புகளுடன் ஒத்துப் போவதால் இத்தகைய ஆபரேசன் சாத்தியமானது. ஆனால், ஜப்பானில் இத்தகைய உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவதில்லை. மாறாக, மாற்று ஆபரேசனுக்கு தேவையான உறுப்புகளுக்காக அதற்கென்றே விசேஷமாக பன்றிகள் உருவாக்கப்படுகின்றன.
ஜப்பான் மெய்ஜி பல்கலைக்கழகம் மற்றும் கியோடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இத்தகைய புதுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு வெற்றி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் 40 வித வைரஸ் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உறுப்பு மாற்றும் ஆபரேசன் செய்தவர் பாதுகாக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக விஞ்ஞானிகள் நோய் விளைவிக்கும் வைரஸ்கள் இல்லாத நல்ல நிலையில் உள்ள பன்றிக்குட்டிகளை உருவாக்கினர். அவற்றை நன்கு சுத்திகரித்து சுத்தமாக செயற்கை பாலூட்டி வளர்த்தனர். அவைகள் 1.8 கிலோ எடை வந்தவுடன் அவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து மனிதர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.
பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் ஜப்பான் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறைகளின் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறையின் கீழ் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. #Tamilnews