காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியல் சட்டம் 370, 35 ஏ ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இதை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார். பின்னர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் மந்திரி பரூக் அப்துல்லா கூறி இருந்தார்.

இதற்கிடையே டெல்லி வக்கீல் எம்.எல்.சர்மா காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

நீதிபதி என்.பி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சட்டவிரோதம் என்றும், சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனறும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 12 அல்லது 13ம் தேதி விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், உரிய நேரத்தில் அவரது மனு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதேபோல காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரான தெசின்புன்வாலா தாக்கல் செய்த மனுவில், ‘‘காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. செல்போன், இணையதள சேவை முடக் கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும், வீட்டுக் காவலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபாவை விடுவிக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com