

அமலாக்கத்துறையில் இணை இயக்குநராக உள்ள ராஜேஸ்வர் சிங் 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரங்களை விசாரித்து வந்தவர். இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரை பணியிலிருந்து விடுவித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ராஜ்னேஷ் கபூர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்திருந்த ராஜேஸ்வர் சிங். அதில், தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது. 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த தன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்த போது, தன்னை குற்றமற்றவர் என சிபிஐ மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பகம் சான்றிதழ் அளித்தது என குறிப்பிட்டிருந்தார்.