நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் தடை

சுப்ரீம் கோர்ட்டால் ஆறுமாத சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவு தொடர்பான செய்திகளை வெளியிட கூடாது என தொலைக்காட்சி, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது.
நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் தடை
Published on

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந்தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


தண்டனைக்குள்ளான நீதிபதிகள் ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து கர்ணன் தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com