

புதுடெல்லி:
இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது. எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர்.
இதில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக பெரு நகரங்களில் ரூ.5 ஆயிரமும், மற்ற பகுதியில் ரூ.3 ஆயிரமும் இருந்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என வங்கித் தலைவர் ரஜ்னீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.