சவுதி அரேபியா வான் எல்லையை பாதுகாக்க தென் கொரியாவிடம் இளவரசர் அவசர ஆலோசனை

சவுதி அரேபியா நாட்டு வான் எல்லையை பாதுகாக்க தென் கொரியாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு கவன்களை வாங்க இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார்.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
Published on

ரியாத்:

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் சவுதியில் தினந்தோறும் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

இந்நிலையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவுதி நாட்டு வான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

இந்த உரையாடலின் போது, எண்ணெய் கிடங்குகளில் நடத்தபட்ட தாக்குதல்கள் சவுதி அரேபியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை உலக நாடுகள் இணைந்து தீர்க்கவேண்டும் என தென் கொரிய அதிபர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முகமது பின் சல்மான், சவுதி வான் எல்லைகளை ஏவுகணை தாக்குதல் உள்பட அனைத்து விதமான வான்வெளி அச்சுறுத்தல்களிடமிருந்து பாதுகாக்க ஏவுகணை தடுப்பு கவன்களை தென் கொரியா வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

சவுதி அரேபியாவிடம் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் தென் கொரியாவுக்கு மட்டும் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதம் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com