சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு

சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். #SaudiKingSalman #MikePompeo
சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு
Published on

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்ற அவர், மாயம் ஆனார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபிய மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்தப் பதிவில் அவர், “ சவுதி மன்னரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், எங்கள் சவுதி அரேபிய குடிமகனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அவர் இந்தப் பிரச்சினையில் விடை காண்பதற்கு துருக்கியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மன்னரை சந்தித்துப் பேசுதற்காக வெளியுறவு மந்திரியை அங்கு (சவுதி அரேபியா) உடனே அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அவர் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சவுதி அரேபியா அனுப்பினார்.

நேற்று ரியாத் போய்ச் சேர்ந்த மைக் பாம்பியோ, சவுதி மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் மைக் பாம்பியோ சந்தித்து விட்டு துருக்கி நாட்டுக்கு விரைகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com