துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குடும்பத்தாருடன் சவுதி மன்னர் சந்திப்பு

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பத்தாரை சவுதி மன்னரும் இளவரசரும் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #Saudiking #Saudicrownprince #Khashoggi #Khashoggison
துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குடும்பத்தாருடன் சவுதி மன்னர் சந்திப்பு
Published on

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது

அவர் அந்த தூதரகத்துக்குள் சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.
 
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு சவுதி தூதரகத்தில் பணியாற்றும் 26 பேருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

சவுதி மன்னரை விமர்சித்து எழுதிய அவரது கை விரல்களை வெட்டி, துண்டித்த பின்னர் கூலிப்படையினர் அவரை தீர்த்துக் கட்டியதாக தற்போது தெரியவந்துள்ளது. இஸ்தான்புல் புறநகர் பகுதியில் உள்ள காடுகளில் கஷோக்கியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், லண்டன் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் தூதரின் முதன்மை செயலாளராக பணியாற்றிய விபரமும் கிடைத்துள்ளது.

ஜமால் கஷோக்கி படுகொலை தொடர்பாக இன்று துருக்கி பாராளுமன்றத்தில் விரிவான தகவல்களை அளிக்கப்போவதாக அந்நாட்டின் அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.        

இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மகன் சலா கஷோக்கி மற்றும் சகோதரர் சஹேல் ஆகியோரை இன்று அரண்மனைக்கு வரவழைத்த சவுதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர்  அவர்களுக்கு ஆறுதல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com