

சென்னை:
ரஷியாவுக்கு சொந்தமான ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதல் செயற்கைக்கோளாக 4-10-1957 அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதிவரை ஒருவார காலம் உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.
10-10-1967 அன்று உலகின் முக்கிய நாடுகளுக்கு இடையில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை உருவாக்கப்பட்டு உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அவ்வகையில், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கிவரும் இஸ்ரோவுக்கு சொந்தமான சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் உலக விண்வெளி வார கொண்டாட்ட நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
சத்யபாமா பல்கலைக்கழக துணைவேந்தர் மரியஜீனா ஜான்சன் தலைமையுரையாற்றும் இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழக தொல்லியல் துறை மந்திரி கே.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய மூத்த அதிகாரிகள் டாக்டர் எஸ்.சங்கரன், ஜி.கிரஹத்துரை உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரே நேரத்தில் 20 செய்ற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்த இஸ்ரோவின் அபார வெற்றியில் சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ’சத்யபாமா சாட்’ செயற்கைக் கோளும் இடம்பெற்றுள்ளது.
சுமார் 1.5 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பசுமை இல்லங்கள் வெளியிடும் வாயுக்கள் குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு தகவல் அளிப்பதற்காக செலுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.