சசிகுமார் கொலை வழக்கு - மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம்

சசிகுமார் கொலை வழக்கில் கைதானவர்களுடன் தொடர்புடைய மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சசிகுமார் கொலை வழக்கு - மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம்
Published on

கோவை:

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் முபாரக்(35), சதாம்உசேன் (27), சுபைர்(33), அபுதாகீர் (32) ஆகிய 4 பேரை சி.பி.சி. ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் பின்னணியில் ஒரு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் கைதான முபாரக் உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மார்ச்18-ந் தேதி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து நேற்று செல்வபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பெபின் ரகுமான்(25), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அனீஷ்(32), குனியமுத்தூர் சுகுணாபுரத்தை சேர்ந்த ஹைதர் அலி(33), துடியலூர் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன், வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் ஒரு லேப்டாப், டைரி, 3 சி.டி.க்கள், செல்போன்கள், 50-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடமும் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அவர்களை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறி சென்றனர்.

கைப்பற்றப்பட்ட செல்போன், சிம்கார்டுகள், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலக ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகுமார் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக் உள்பட 4 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வீடுகளில் சோதனை நடத்தப்பட் டது. இதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

என்.ஐ.ஏ. விசாரணையில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் பேரில் மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினர்.

இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்ற பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலை நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதம் செய்துள்ளனர். வெளியில் இருந்து லேப்டாப்பை கொண்டு வந்து வைத்து ஏதோ காகிதங்களில் எழுதி மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com