

அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் சசிகலா-தினகரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அம்மா அணியில் தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.
முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் பற்றி வாய் திறக்காமலேயே இருந்து வரும் நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்களது சசிகலா பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் சசிகலா, தினகரன் ஆகியோரது புகழ் பாடி வருகிறார்கள்.
சட்டசபையில் வணிகவரி முத்திரைதாள்கள் மற்றும் பத்திரபதிவு தொடர்பான மானிய கோரிக்கையின் போது பேசிய செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. சசிகலாவையும், தினகரனையும் புகழ்ந்து பேசினார்.
சசிகலா பற்றி அவர் பேசும் போது, ஜெயலலிதாவுக்காக 33 ஆண்டுகள் தனது வாழ்வை அர்ப்பணித்து தியாகம் செய்தவர் என்று குறிப்பிட்டார். டி.டி.வி. தினகரன் பற்றி பேசிய செந்தில் பாலாஜி, அவர் தான் அ.தி.மு.க.வை கட்டிக் காப்பார் என்று குறிப்பிட்டார்.