விசாரணை அறிக்கையில் கூறப்பட்ட குற்றவாளிகளால் உயிருக்கு ஆபத்து: சரிதா நாயர்

சோலார் பேனல் மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்ட குற்றவாளிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சரிதா நாயர் கூறினார்.
சரிதா நாயர்
சரிதா நாயர்
Published on

கேரளாவில் சோலார் பேனல் நிறுவனம் நடத்தி பொது மக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் அலுவலக உதவியாளர்கள் துணை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி சிவராஜன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இந்த கமி‌ஷன் அறிக்கை சமீபத்தில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில் கூறப்பட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என இப்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

இதனால் விசாரணை கமி‌ஷனின் முழு விபரங்களையும் வெளியிட வேண்டும் என உம்மன்சாண்டி உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருகிற 9-ந் தேதி சட்டமன்றத்தில் சோலார் பேனல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் சரிதா நாயார் குமரி மாவட்டம் தக்கலை பகுதிக்கு திடீரென வந்தார். இங்கு பேப்பர் கப் மற்றும் பிளேட் தயாரிக்கும் தொழில் தொடங்கவும், அறக்கட்டளை ஆரம்பிக்கவும் ஏற்பாடு செய்தார். இதற்கான இடம் தேர்வு செய்ய வந்த சரிதா நாயார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோலார் பேனல் மோசடி வழக்குக்கு 90 சதவீதம் அரசியல் போட்டியே காரணமாகும். இதன் விசாரணை அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

இதில் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகும் போது பலரது அரசியல் வாழ்வு அஸ்தமித்து விடும்.

என் மீது 44 வழக்குகள் போடப்பட்டன. இதில் 22 வழக்குகளில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டு உள்ளேன். சோலார் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அதனை எதிர்த்து இறுதி வரை போராடுவேன்.

இந்த வழக்குக்கு 90 சதவீதம் அரசியல் காரணம் என்றால், 5 சதவீதம் தொழில் பங்குதாரர்களின் சூழ்ச்சியும், 5 சதவீதம் எனது தவறும் காரணம் ஆகும்.

ஒருவர் மக்களை ஏமாற்றி மோசடி செய்து விட்டார் என்பதற்காக அவர் அதையே தொடர்ந்து செய்வார் என மக்கள் நினைக்கிறார்கள். நான் இப்போது நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.

தக்கலையில் பேப்பர் பிளேட், டம்ளர் தயாரிக்கும் தொழில் தொடங்க திட்டுமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தக்கலை, முட்டைக்காடு பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக சரிதா நாயார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இப்பகுதியில் தான் அவர் நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com