தனியார் டி.வி.யில் வெளியானது போலியான வீடியோ காட்சிகள்: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி

தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவில் தனது குரல் “டப்பிங்” செய்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எம்.எல்.ஏ. சரவணன் கூறினார்.
தனியார் டி.வி.யில் வெளியானது போலியான வீடியோ காட்சிகள்: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி
Published on

மதுரை:

அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்தபோது சசிகலா அணியில் இருந்து விலகி கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்.

ஆங்கில தொலைக்காட்சியான “டைம்ஸ் நவ்”வில் சரவணன் எம்.எல்.ஏ. பேசுவதுபோன்ற ரகசிய வீடியோ நேற்று ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சரவணன் எம்.எல்.ஏ. கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பணப்பேரங்கள் குறித்து பேசுவதுபோல காட்சிகள் இருந்தன.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.6 கோடி வரை தர முன்வந்ததாகவும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுவதுபோன்று அந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

அவர் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்த ரகசிய வீடியோ வெளியானது குறித்து சரவணன் எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசி நான். அவரது மறைவுக்கு பிறகு கட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டபோது ஆட்சிக்கு எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அப்போது நான் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் எந்த காரணமும் சொல்லாமல் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு சென்றபின்னர் தான் பல வி‌ஷயங்கள் எனக்கு தெரியவந்தது. அப்போது எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் தொகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்துமே நீங்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான பன்னீர் செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினர்.

அந்த அடிப்படையில் கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்து கொண்டேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.

இந்த சூழ்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தும் என்னுடையதல்ல. எனது குரலைபோல “டப்பிங்” செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் தங்கி இருந்தபோது நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரும் எனக்கு பணம் தருவதாக கூறவும் இல்லை.

கடந்த சில வாரங்களாகவே என் மீது தவறான தகவல்களை பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

நான் எப்போதுமே பன்னீர்செல்வத்துடன்தான் இருப்பேன். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன். என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட இந்த ரகசிய வீடியோ முற்றிலும் போலியானது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பரபரப்பில் சிக்கி உள்ள சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை விமானம் மூலம் சென்னை சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து இதுதொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com