

பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வீரசிகாமணியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 56). இவர் நேற்று முன்தினம் மாலையில் நெல்லையில் இருந்து வீரசிகாமணிக்கு காரில் குடும்பத்தினருடன் சென்றார். பனவடலிசத்திரம் அருகே வன்னிக்கோனேந்தல் பகுதியில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்ற மற்றொரு காரின் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி, சாலையில் சரிந்தது.
இந்த விபத்தில் சண்முகநாதன், அவருடைய மனைவி கல்பனா (46), உறவினர்களான புளியங்குடியைச் சேர்ந்த மாரியப்பன் (60), சதீஷ்குமார் (37), டிரைவரான ஸ்ரீதர் மற்றும் சாலையில் நடந்து சென்ற தெற்கு புளியம்பட்டியைச் புஷ்பராஜ் (55) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார்.
சண்முகநாதன் உள்ளிட்ட மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சண்முகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.