

முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர், காக்கூர், வெங்கலகுறிச்சி, குமார குறிச்சி, மு.சாலை, கீழத்தூவல், மகிண்டி, சிறுகுடி, மணக்குளம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் அரசு புறம்போக்கு, கண்மாய், ஊரணிகள், தனியார் விவசாய நிலங்களில் அனுமதியின்றி மணல் திருடுவது அதிகரித்துள்ளது.
மணல் திருட்டை தடுக்க டி.எஸ்.பி., ரவி தலைமையில் தனிப்படை போலீசார் நியமித்தும், போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி, மணல் மாபியாக்கள் மணல் திருடுவது அதிகரித்துள்ளது.
முதுகுளத்தூர் அருகே கூத்தன் கால்வாய் செல்லும் வழி, மின்வாரியம் எதிரே செல்லும் காக்கூர் கண்மாய், காத்தாகுளம் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய், மு.சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் தடையில்லாமல் மணல் கடத்தல் நடக்கிறது.
முதுகுளத்தூர், அபிராமம், கடலாடி பகுதிகளில் மணல் குவாரிகள் இல்லாத போதும், முதுகுளத்தூரில் மட்டும் மணல் தட்டுப்பாடு இல்லை. விவசாய நிலங்கள், கண்மாய்களில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மணல் திருட்டை ஒழிக்காவிட்டால் நீர்நிலை ஆதாரங்களான போர்வெல், கைப்பம்புகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்று பொதுமக்கள் கூறினர். #tamilnews