மணல் திருட்டு குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணல் திருட்டு குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
Published on

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் விளாவடி காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. பா.ஜனதா கட்சியில் எஸ்.சி, அணியின் குத்தாலம் நகர பொதுச் செயலாளராக உள்ளார். மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த வேளாண்மை பொறியியல் துறையைச் சேர்ந்த உதவி என்ஜினீயர் பாஸ்கரன் என்பவர் மீது, விளாவடி காலனி பகுதியில் பிளாட் போடுவதாக கூறி அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக, குத்தாலம் தாசில்தார் மற்றும் போலீசில் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று குத்தாலம் விளாவடி காலனிக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் புகழேந்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புகழேந்தியை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து என்ஜினியர் பாஸ்கரன் மீது குத்தாலம் போலீசில் புகழேந்தி புகார் அளித்தார். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com