

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கம்பளி வழங்குவதற்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால், அதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் டெண்டர் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமீபத்திலும் விடப்பட்ட டெண்டரை மாநில அரசு மீண்டும் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கம்பளி வழங்குவதில் மாநில அரசு அலட்சியம் காட்டி வருகிறது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அகிலேஷ் டுவிட்டரில் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு கம்பளி வழங்கும் டெண்டரை மாநில அரசு மீண்டும் ரத்து செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கம்பளி வழங்கும் விவகாரத்தில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. வரும் மே-ஜூன் மாதத்துக்குள் கம்பளி வழங்கிவிடும் என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டை தொடக்க கல்வி மந்திரி அனுபமா ஜெய்ஸ்வால் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.