குல்புஷன் ஜாதவுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞருக்கு 1 ரூபாய் சம்பளம் - சுஷ்மா ஸ்வராஜ்

இந்திய உளவாளியாக கருதி பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்புஷன் ஜாதவுக்கு ஆதரவாக வாதாடும் ஹரிஷ் சால்வே 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
குல்புஷன் ஜாதவுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞருக்கு 1 ரூபாய் சம்பளம் - சுஷ்மா ஸ்வராஜ்
Published on

புதுடெல்லி:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பு‌ஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வுக்கு அவர் உளவு வேலை பார்த்ததாக கூறி அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டை ஜாதவ் மறுத்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த இந்தியா, இவ்வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. மேலும், இந்த வழக்கில் ஜாதவ்-க்கு ஆதரவாக இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதாடுகிறார்.

இந்நிலையில், சஞ்சிவ் கோயல் என்பவர் டுவிட்டர் பக்கத்தில் ,” இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் ஏன் சிறந்த வழக்கறிஞர்கள் கிடைப்பதில்லை?, ஹரிஷ் சால்வே எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ,”ஜாதவின் வழக்கில் ஆஜராவதற்காக ஹரிஷ் சால்வே வெறும் ஒரு ரூபாய் மட்டும் தான் வாங்குகிறார்” எனத் தெரிவித்துள்ளார். ஹரிஷ் சால்வே இந்தியாவின் மூத்த பிரபல வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com