சேலத்தில் கல்லூரி பேராசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

சேலத்தில் கல்லூரி பேராசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் கல்லூரி பேராசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் பழையூர் அய்யம் பெருமாம்பட்டி, ஊமையர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி ஆனந்தி (வயது34).

இவர், சேலம் கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரியில் பணி முடிந்து மாலையில் ஆனந்தி தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பினார்.மாலை 6 மணிக்கு கருப்பூர், சாமிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து, ஆனந்தி ஓட்டிய மொபட்டை முந்திச்சென்று குறுக்கே தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்த வாலிபர், ஆனந்தி கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தான். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும். அதிர்ச்சி அடைந்த ஆனந்தி அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆனந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து, தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.

பெண்களை குறி வைத்து நகை பறிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பலை போலீஸ் உயர் அதிகாரிகள் களை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com