சேலம் விடுதி மாடியில் தோழியுடன் தற்கொலைக்கு முயன்ற மாணவி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்

சேலம் விடுதி மாடியில் தோழியுடன் தற்கொலைக்கு முயன்ற மாணவி கவிஸ்ரீ மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்.
கவிஸ்ரீ
கவிஸ்ரீ
Published on

சேலம்:

சேலம் அரிசிப்பாளையத்தில் அரசு உதவி பெறும் செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாணவி ஜெயராணி (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரும், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் இவரது நெருங்கிய தோழி கவிஸ்ரீ(13)யும் கடந்த 9-ந்தேதி சேலம், ராஜகணபதி கோவில் அருகே உள்ள தேர் வீதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.

இதில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கவிஸ்ரீ படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை நேரில் சந்தித்து நேற்று மாலை முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கலைவாணி விசாரணை நடத்தினார். அப்போது குடும்பம் மற்றும் பள்ளிச்சூழல், இறந்த மாணவி உடனான நட்பு குறித்து அடுத்தடுத்து 20 கேள்விகள் எழுப்பினார். அதற்கு கவிஸ்ரீ அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. அதில், ஜெயராணியை அவரது சித்தி அடிக்கடி கொடுமைப்படுத்தியது குறித்து என்னிடம் பல முறை கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதனால் தற்கொலைக்கு முயன்ற அவரை பல முறை நான் தடுத்துள்ளேன்.

தற்கொலைக்கு முதல் நாள் சாரதா பள்ளி அருகே உள்ள கட்டிடத்தில் இரவு தங்கி விட்டு அதிகாலை சுமார் 5.30 மணிக்கு கடைவீதிக்கு வந்தோம். அதன் பின் தற்கொலையில் ஈடுபட்டோம். என்னுடைய நோட்டு புத்தகத்தில் ஐ லவ் யூ கவிஸ்ரீ என ஜெயராணி எழுதியிருந்தார். அதை சக மாணவிகள் ஆசிரியையிடம் காட்டி கொடுத்து விட்டதால் ஒன்றாக அமர்ந்திருந்த எங்களை தனித்தனியாக அமர வைத்ததோடு பெற்றோரை அழைத்து வர சொன்னதால் மனவேதனை அடைந்து இந்த முடிவுக்கு வந்தோம் என்று கவிஸ்ரீ வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

இவ்வாறு பல்வேறு தகவல்களை அவர் வாக்குமூலமாக கொடுத்தார். அப்போது, அவசர சிகிச்சை பிரிவு அலுவலர் செல்வராஜ் உடனிருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com