சபரிமலை விவகாரம்: பா.ஜனதா மாநில நிர்வாகிகள் 4 பேர் ராஜினாமா

பா.ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள மாநில நிர்வாகிகள் 4 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #CPIM
சபரிமலை விவகாரம்: பா.ஜனதா மாநில நிர்வாகிகள் 4 பேர் ராஜினாமா
Published on

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

பா.ஜனதா கட்சி நடத்தும் போராட்டம் காரணமாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.

விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM

X

Maalai Malar
www.maalaimalar.com