சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 10-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட முக்கிய நாட்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் கோவில் திருவிழா மற்றும் பங்குனி மாத பூஜையையொட்டி 11-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை விழா நடைபெற்றது.

இந்த நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

11-ந் தேதி முதல் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை போன்றவை நடைபெறும்.

வருகிற 15-ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்படும். பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19-ந் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com