தேவகோட்டை அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் - 5 பேர் கைது

தேவகோட்டை அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
தேவகோட்டை அருகே ரூ.70 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் - 5 பேர் கைது
Published on

தேவகோட்டை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேவகோட்டை பகுதிக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேவகோட்டை போலீஸ் ஏட்டுகள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, நடராஜன் மற்றும் போலீசார் தேவகோட்டை அருகே உள்ள மூப்பையூர் ரோட்டில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று காலை அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதில் இருந்த 5 பேர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினிலாரியை சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் பல்லிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அதனையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டைகளை கடத்தி வந்த திருவாடானை அஞ்சுக்கோட்டை செங்கலான்வயலைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43), தொண்டியைச் சேர்ந்த விக்னேஷ் (23), திருவாடானை தம்பிக்கோட்டை சிவா (27), எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டணத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் தேவகோட்டை வாடிநன்னீயூரைச் சேர்ந்த வேடப்பன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொண்டி கொடிபங்கு கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com