ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி மோசடி- சிவசங்கரன் லண்டனுக்கு தப்பி ஓட்டம்?

ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி மோசடி செய்தது தொடர்பாக சிவசங்கரன் மீது சிபிஐ 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் லண்டனுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.#IDBI #BankFraud
ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி மோசடி- சிவசங்கரன் லண்டனுக்கு தப்பி ஓட்டம்?
Published on

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன்.

இங்கிலாந்து, பின்லாந்து நாடுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களுக்கு டெல்லி, மும்பை, சென்னை உள்பட 10 நகரங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.

கடந்த 2010-ம் ஆண்டு இந்த நிறுவனங்களின் பெயரில் சென்னை ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிவசங்கரன் ரூ.322.40 கோடி கடன் வாங்கினார். 2013-ம் ஆண்டு கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாததால் சிவசங்கரனின் நிறுவனங்கள் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு சிவசங்கரனின் நிறுவனங்களுக்கு ஐ.டி.ஐ.பி. வங்கியினால் மேலும் கடன் வழங்கப்பட்டது. அந்த கடன் தொகை தற்போது ரூ.600 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐ.டி.ஐ.பி. வங்கி பல தடவை கேட்டும், ரூ.600 கோடி கடனை சிவசங்கரன் திருப்பி கொடுக்கவில்லை. அவர் ரூ.600 கோடியை மோசடி செய்து விட்டதாக ஐ.டி.ஐ.பி. வங்கி குற்றம் சாட்டியது. அதோடு சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தது.

சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து தொழில் அதிபர் சிவசங்கரன், அவரது மகன் சரவணன் மற்றும் சிண்டிகேட் வங்கி தலைவர் மெல்வின் ரெகோ, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் கிஷோர் காரத் உள்பட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 120, 420, 409, 13(2) மற்றும் 13(1) (4) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே டெல்லி, மும்பை, சென்னை உள்பட 10 நகரங்களில் உள்ள சிவசங்கரனின் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதில் வங்கியில் திட்டமிட்டு ரூ.600 கோடி அளவுக்கு கடன்கள் பெற்றதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிவசங்கரனிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக சிவசங்கரன் எங்கு இருக்கிறார் என்ற விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிவசங்கரன் இந்தியாவில் இல்லை என்பது தெரிய வந்தது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சிவசங்கரனுக்கு லண்டனில் பெரிய சொகுசு பங்களா உள்ளது. எனவே அவர் லண்டனுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com