காரில் கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்- டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் (உள்படம்: கைதான டிரைவர்)
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் (உள்படம்: கைதான டிரைவர்)
Published on

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கு இடமான ஒரு சொகுசு காரை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 292 கிலோ எடை கொண்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயர்ரக செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, காரில் இருந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த ராவன் பாப்பாய் (24) என்பவரை கைது செய்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தியில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, காருடன் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் ராவன் பாப்பாய்யையும் கும்மிடிப்பூண்டி வனசரகர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனசரக அலுவலகத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com